CINEMA
ஒரு கல் ஒரு கண்ணாடிலாம் கிடையாது..ஒரே கல் தான்.. உதயநிதியை பங்கமாய் கலாய்த்த சந்தானம்…
“குலு குலு” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தானம் பயங்கரமாய் உதயநிதியை தனது பாணியில் புகழ்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. அத்திரைப்படத்தின் பெரிய வெற்றியாக திகழ்ந்தது உதயநிதி-சந்தானம் காம்போ.
இருவரும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி எடுத்திருப்பார்கள். குறிப்பாக கிளைமேக்ஸில் ஹன்சிகா திருமணத்திற்குச் சென்று பேசும் வசனங்கள் ஆகட்டும், அதற்கு முன் விமானத்தில் ஹன்சிகாவை கலாய்ப்பதாகட்டும், சந்தானத்தின் காதலியை உதயநிதி ஸ்டாலின் பங்கமாய் கலாய்ப்பதாகட்டும், படம் முழுவதுமே இவர்களின் காம்போ செமத்தியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.
அதன் பின் இதே உதயநிதி ஸ்டாலின்-சந்தானம் காம்போவில் “நண்பேன்டா”, “கதிர்வேலன் காதல்” ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து ரத்ன குமார் சந்தனத்தை வைத்து இயக்கிய “குலு குலு” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக வெளியிட உள்ளார். இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சந்தானம், உதயநிதி ஸ்டாலின், ரத்ன குமார், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மேடையில் பேசிய சந்தானம் உதயநிதியை குறித்து பேசுகையில் “உதயநிதி ஸ்டாலினுடன் நான் நடிக்கும் போது அவருக்காக எழுதிய பல வசனங்களை என்னை பேசச் சொல்வார். ஆனால் அப்போதெல்லாம் இவரை பற்றி தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போது பயங்கரமாய் பேசினார். அப்போது தான் புரிந்தது. இவர் இத்தனை நாள் படத்தில் வசனம் பேசத் தெரியாதது போல் நடித்தார் என்று. இவர் சினிமாவில் பேச வரவில்லை. மக்களிடம் தான் பேச வந்தார் என அப்போது தான் புரிந்தது” என கூறினார்.
மேலும் பேசிய சந்தானம் “ஒரு கல், ஒரு கண்ணாடியை விட ஒரு கல்லை வைத்து இவர் பயங்கரமான விஷயத்தை எல்லாம் செய்துவிட்டார்” என கூறியது ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
“குலு குலு” திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.
