CINEMA
தமிழ் சினிமா வரலாற்றில் பொன்னியின் செல்வன் படைக்க இருக்கும் சாதனை என்ன தெரியுமா?
தமிழ் சினிமா வரலாற்றிலேயே “பொன்னியின் செல்வன்” திரைப்படம் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து மொழிகளிலும் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல் “ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு Slow Poison” என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு சாதனையை நிகழ்த்தவுள்ளது.
அதாவது “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களும் ஐமேக்ஸில் அகன்ற திரையில் வெளிவருகிறது. தமிழ் சினிமாவில் ஐமேக்ஸில் வெளிவரும் நேரடி தமிழ் திரைப்படம் “பொன்னியின் செல்வன்” தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்தான ஒரு தகவல் வெளிவந்தது. அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது.
இதில் “பொன்னியின் செல்வன்” படக்குழுவினர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் ஹாசன், மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
