CINEMA
“பொன்னியின் செல்வன்” இவ்வளவு பெரிய படமா? அடேங்கப்பா..
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவல் 5 பாகங்களை கொண்டது. “இவ்வளவு பெரிய நாவலை வெப் சீரீஸாக தான் எடுக்க முடியும், திரைப்படமாக எடுக்க முடியாது” என பலரும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் ஒரு பேட்டியில் பேசிய போது “பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய பகுதிகளையே படமாக்கியுள்ளோம்” என கூறினார். இதனை வைத்து பார்க்கும்போது நாவலை அப்படியே எடுக்காமல் அந்த சாராம்சத்தை மட்டும் எடுத்து இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளதாக தெரிகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை நீளம் உடைய திரைப்படம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)