CINEMA
பணம் கேட்டு மிரட்டும் மோகன் ஜீ..? தெளிவுபடுத்திய இயக்குனர்…
இயக்குனர் மோகன் ஜீ மெசஞ்சரில் பணம் கேட்டு மிரட்டுவதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து மோகன் ஜீ தனது சமூக வலைத்தளத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இயக்குனர் மோகன் ஜீ “பழைய வண்ணாரப்பேட்டை” என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படம் எடுத்து முடித்த பிறகு பல வருடங்கள் கழித்து தான் வெளியானது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்ன நான் நினைக்கையில” என்ற பாடல் இப்போதும் ஹிட் பாடலாக இருக்கிறது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “திரௌபதி” திரைப்படத்தை இயக்கினார் மோகன் ஜீ. நாடக காதலை எதிர்த்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது என கூறினாலும் இத்திரைப்படம் பல சர்ச்சைகளை உண்டு செய்தது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறி வைத்து தாக்கி உள்ளார் இயக்குனர் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
“திரௌபதி” திரைப்படம் சர்ச்சைகளை கிளப்பினாலும் அத்திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து “ருத்ர தாண்டவம்” என்ற திரைப்படத்தை இயக்கினார் மோகன் ஜீ. இத்திரைப்படமும் சிறுபான்மையினரை தாக்கி அமைந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியது. “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்” ஆகிய திரைப்படங்களில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மோகன் ஜீ தற்போது “பகாசூரன்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன் ஜீ சிலரை மெசஞ்சரில் பணம் கேட்டு மிரட்டுவதாக சில செய்திகள் வெளிவந்தன.
தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மோகன் ஜீ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “என் பெயரில் போலி கணக்கு ஆரம்பித்து பணம் கேட்பதாக சில தகவல்கள் வருகின்றன. தயவு செய்து கவனமாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார். எனவே அது போலி கணக்கு என தெரிய வருகிறது.
