CINEMA
உதயநிதியை பங்கமாய் கலாய்த்த மிர்ச்சி சிவா.. சிரிப்பலையில் அரங்கம்
“பேப்பர் ராக்கெட்” வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதியை குறித்து மிர்ச்சி சிவா கூறியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் வெப் சீரீஸ் “பேப்பர் ராக்கெட்”. இந்த வெப் சீரீஸ் வருகிற 29 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிசான், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், சின்னி ஜெயந்த் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
கிரித்திகா உதயநிதி இதற்கு முன் “வணக்கம் சென்னை”, “காளி” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று “பேப்பர் ராக்கெட்” வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மிஷ்கின், உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், மிர்ச்சி சிவா, சிம்பு, தான்யா ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய மிர்ச்சி சிவா “உதயநிதியை இப்போது எப்படி அழைப்பது என தெரியவில்லை. அவர் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி தான்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “யார் யாரெல்லாம் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகிறார்கள் என கேட்டேன். உதயநிதி வருகிறார் என கூறினார்கள். வந்து தானே ஆகனும். எங்க சுத்தினாலும் இங்க வந்து தானே ஆகனும்” என கேலியாக கூறினார். இதனை ஆமோதிக்கும் வகையில் உதயநிதியும் சிரித்தார்.
“யார் வேண்டுமானாலும் திரைப்படம் இயக்கிவிட முடியாது. அதற்கென்று ஒரு தனி Passion வேண்டும். அதுவும் வெப் சீரீஸ் எடுப்பதென்றால் மிகவும் கஷ்டம்” என கூறி கிருத்திகாவிற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் மிர்சி சிவா.