CINEMA
மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் டாப் நடிகை… தளபதி 67 அப்டேட்!!
“தளபதி 67” திரைப்படத்தில் தென்னிந்தியாவின் டாப் நடிகை ஒருவர் ஜோடி சேர உள்ளார். இவர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளார். அவர் யார் என பார்க்கலாம்.
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இத்திரைப்படத்தில் விஜய் படம் முழுக்க நெகட்டிவ் ரோலில் வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. இத்திரைப்படத்தில் 6 வில்லன்கள் என கூறப்படுகிறது. பிரித்விராஜ், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் சமந்தாவின் பெயரும் அடிபடுகிறது.
இதனிடையே இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்படுகிறது. அதில் ஒருவர் த்ரிஷா என ஏற்கனவே தகவல் வந்தது. இந்த நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “தளபதி 67” திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் “பைரவா”, “சர்க்கார்” போன்ற திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.