CINEMA
“விக்ரம்” பாடலின் இசையமைப்பாளர் சாவுக்கு யாரும் வரவில்லை; பிரபல பாடகர் மன வருத்தம்
“விக்ரம்” திரைப்படத்தில் பின்னணியில் ஒலித்த “வத்திக்குச்சி” பாடலை இசையமைத்தவர் இறந்த போது திரையுலகம் அவரை ஒதுக்கியது குறித்து பிரபல பின்னணி பாடகர் ஒருவர் மன வருத்ததுடன் கூறியுள்ளார்.
“விக்ரம்” திரைப்படத்தில் நரேனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்க வைக்க கமல் ஹாசன் அங்குள்ளவர்களிடம் சண்டையிடுவார். அப்போது பின்னணியில் “சக்கு சக்கு வத்திக்குச்சி” என்ற பாடல் ஒலிபரப்பாகும்.
அந்த பாடல் அந்த சண்டை காட்சியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. படம் வெளியான பின் அந்த பாடலை பலரும் யூட்யூப்பில் தேடிச் சென்று பார்த்த வண்ணம் இருந்தனர்.
“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடல் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த “அசுரன்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். அத்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஆதித்யன். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்தார். அவரின் இறப்பு குறித்து பிரபல பின்னணி பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா மன வருத்தத்துடன் சிலவற்றை தெரிவித்துள்ளார்.
அதாவது இசையமைப்பாளர் ஆதித்யன் ஹரீஷ் ராகவேந்திராவிற்கு தொழில் ரீதியாக முக்கிய உதவிகளை செய்துள்ளாராம். இதனை நன்றி உணர்வுடன் குறிப்பிட்டார் ஹரீஷ். அவருக்கும் ஹரீஷிற்கும் பல நாள் பழக்கம் இருந்திருக்கிறது. அவர் இசையமைத்த பாடல்களில் கூட ஹரீஷ் ராகவேந்திரா பாடியிருக்கிறாராம்.
சில வருடங்கள் கழித்து ஆதித்யன் எந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கவில்லை. ஒரு நாள் ஆதித்யன் இறந்துவிட்டதாக தகவல் வந்ததாம். அவர் அவரது வீட்டிற்கு மாலையுடன் சென்றபோது அனைவரும் ஏதோ ஆச்சரியமாக அவரை பார்த்தார்களாம். அங்குள்ளவர்களில் ஒருவர் ஹரீஷிடம் நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள், திரை உலகைச் சேர்ந்த எவரும் வரவில்லை என கூறியிருக்கிறார். இது குறித்து ஹரீஷ் ராகவேந்திரா தனது யூட்யூப் பக்கத்தில் கவலையோடு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “இத்திரையுலகம் வேண்டும் என்பவரை எங்கு இருந்தாலும் தேடி வரும். வேண்டாம் என்பவரை அருகில் இருந்தால் கூட கண்டுக்காது” எனவும் கவலையோடு தெரிவித்துள்ளார்.
