CINEMA
“நான் இனிமே படம் நடிக்க போறதில்லை”.. உதயநிதி திட்டவட்டம்
உதயநிதி ஸ்டாலின் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்த “குருவி” திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்பு “ஒரு கல் ஒரு கண்ணாடி: திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் கூட அவர் நடிப்பில் உருவாகிவரும் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்தது. அத்திரைப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதையுடன் சமூக ஏற்றத் தாழ்வுகளை சாடி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தையும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆதலால் ஆளுங்கட்சியாக எம். எல் .ஏ. ஆகவும் அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் இனிமேல் தான் நடிக்கப்போவதில்லை எனவும் அரசியல் வாழ்க்கையையே தொடரப் போவதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் வருகிற மே மாதம் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார். கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஆரி, மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாம்ஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆகையால் “மாமன்னன்” திரைப்படம் தான் உதயநிதியின் கடைசி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.