CINEMA
“உதய்ண்ணா மாஸ் கட் அவுட்…” வைரல் புகைப்படம்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் வானளாவிய கட் அவுட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. இத்திரைப்படத்தில் உதயநிதி எடுப்பான சின்சியர் போலீஸாக நடித்துள்ளார். பார்ப்பதற்கே ஆள் டெரிஃபிக்காக இருக்கிறார்.
மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் இருவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய படி கண்டெடுக்கப்படுகிறார்கள். மற்றொரு பெண்ணை காணவில்லை. அப்பெண் எங்கே? குற்றவாளிகளை கண்டுபிடிப்பாரா விஜய ராஜவன் ஐபிஎஸ் (உதயநிதி) என்பதே இத்திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவர்களுடன் மயில்சாமி, இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் பாலிவுட்டில் வெளிவந்து சக்கை போடு போட்ட “ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தின் ரீமேக் தான். ஆனாலும் தமிழுக்கு ஏற்றார் போல் தமிழ் நாட்டில் நடந்த சில சம்பவங்களை இணைத்து திரைக்கதையில் புதுமை சேர்த்திருக்கிறார்கள்.
திரைப்படத்தின் பலமே வசனங்கள் தான். அதுவும் உதயநிதியுடன் சக போலீஸார்கள் சாதி பற்றி பேசும் உரையாடல் திரையரங்குகளில் செம கிளாப்ஸ்களை அள்ளியது. சாதி வெறிக் கொண்ட சுந்தரம் கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் சக்ரவர்த்தி நெகட்டிவ் ரோலில் மிரள வைக்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு திரையரங்கில் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்திற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு வானளவு கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் உதயநிதி ஸ்டாலின் காக்கிச் சட்டையுடன் தெறி மாஸாக காட்சி தருகிறார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படம் தான் உதயநிதி நடிக்கும் கடைசி திரைப்படம் எனவும், அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக செயல்படப்போவதாகவும் சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.