CINEMA
பிரபல சூப்பர் ஸ்டாரின் மகள் தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் என் டி ராமா ராவ். தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல இதிகாச திரைப்படங்களில் கிருஷ்ணராக வந்து ரசிகர்களின் உள்ளத்தில் கடவுளாக குடி போன இவர், 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கினார்.
மக்களின் மனதை வென்ற இவர் 7 வருடங்கள் ஒன்றிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் 1996 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து போனார்.
என் டி ஆருக்கு மொத்தம் 12 குழந்தைகள். அந்த 12 குழந்தைகளுள் இளையவர் தான் உமா மகேஸ்வரி. இவருக்கு வயது 52.
இந்நிலையில் உமா மகேஸ்வரி கடந்த திங்கட்கிழமை ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செய்தி திரை உலகினரிடையேயும் அரசியல் பிரமுகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கின் டாப் நடிகர்களில் ஒருவரான நந்தமுரி பாலகிருஷ்ணா, உமா மகேஸ்வரியின் சகோதரர்களில் ஒருவர்.
அதே போல் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, உமா மகேஸ்வரியின் 4 ஆவது மூத்த சகோதரர். இவர் தான் தற்போது தெலுங்கு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜூனியர் என் டி ஆரின் தந்தை. மேலும் பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தந்தையும் கூட.
முன்னாள் மத்திய அமைச்சரும் பிஜேபி தலைவருமான டக்குபதி புரண்டேஸ்வரி, தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரி ஆகியோர் உமா மகேஸ்வரியின் சகோதரிகள் ஆவர்.
உமா மகேஸ்வரி கடந்த 2021 ஆம் ஆண்டு தான் ஸ்ரீநிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்திருந்தார். இது இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன் நரேந்திர ராஜன் என்பவரை திருமணம் செய்திருந்தார். இவ்வாறு அரசியல் மற்றும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
